ஜெனிவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான மூன்றாவது பிரேரணையை நேற்றைய தினம் சமர்ப்பித்துள்ள அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகத்தன்மைமிக்க சுயாதீனமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.
அத்துடன் இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசேட ஆலோசனையும் தொழில்நுட்ப உதவியும் வழங்கப்படவேண்டும் என்றும் இலங்கையானது பிரேரணையை அமுல்படுத்தும் விடயத்தில் மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் என்றும் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வட மாகாண சபையும் வட மாகாண சபை முதல்வரும் உரிய முறையில் இயங்குவதற்கு இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய அதிகாரங்களும் வளங்களும் வழங்கப்படவேண்டும் என்றும் அமெரிக்காகவும் பிரிட்டனும் கூட்டாக மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பித்துள்ள பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் நேற்றுக்காலை 9 மணிக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தலைமையில் ஆரம்பமானது. இதனையடுத்து சுவிட்சர்லாந்து நேரப்படி நேற்று மாலை 4.00 மணியளவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிரான பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.
”இலங்கையில் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமையை ஊக்குவித்தல் ” என்ற தலைப்பில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள இந்த பிரேரணைக்கு பிரிட்டன் மொன்டனேக்ரோ மெசடோனியா மற்றும் மொரிஷியஷ் ஆகிய நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.
பிரேரணையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் வருமாறு
1. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையை வரவேற்கின்றோம்.
2. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்வதேச மனித உரிமை சட்ட மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் நம்பகத்தன்மைமிக்க சுயாதீனமான விசாரணை நடத்தப்படவேண்டும். மேலும் தொடரும் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்படவேண்டும். ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை அமுல்படுத்தவேண்டும்.
3. கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்ற மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது அவசியமாகும். இதில் நீதி, சமத்துவம், பொறுப்புக்கூறல் மற்றும் அனைத்து மக்களுக்குமான நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
4. நாட்டில் மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும். கோவில், பள்ளிவாசல் போன்றவை மீது எதிர்காலத்தில் தாக்குதல் நடத்தப்படாமல் தடுக்க நடவடிக்கை வேண்டும்.
5. வெலிவேரிய பகுதியில் படையினரால் ஆயுதமற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முடிவுகள் வெளிப்படுத்தப்படவேண்டும்.
6. வட மாகாண சபையும் வட மாகாண சபை முதல்வரும் உரிய முறையில் இயங்குவதற்கு இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய அதிகாரங்களும் வளங்களும் வழங்கப்படவேண்டும்.
7. அகதிகளுக்கான விசேட அறிக்கையாளரை இலங்கை வரவழைத்தமையை வரவேற்கின்றோம். அத்துடன் விசேட ஆணையாளர்களுடன் ஒத்துழைக்குமாறு கேட்கின்றோம்.
8. இலங்கையில் சர்வதேச விசாரணை பொறிமுறை அவசியம் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் கோரிக்கையை வரவேற்கின்றோம். தற்போதைய பிரேரணை தொடர்பில் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடரில் வாய்மூல விளக்கமும் 28 ஆவது அமர்வில் முழுமையான அறிக்கையும் முன்வைக்கப்படவேண்டும்.
9. இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசேட ஆலோசனையும் தொழில்நுட்ப உதவியும் வழங்கப்படவேண்டும்.
10. இலங்கையானது பிரேரணையை அமுல்படுத்தும் விடயத்தில் மனித உரிமைப் பேரவையுடன் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும்.
இதேவேளை, ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் சர்வதேச விசாரணை கோரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சுயாதீன விசாரணை மட்டுமே கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.