இராணுவம் தொடர் பில் வடபகுதி மக்கள் எந்த வித அச்சமும் கொள்ள தேவையில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்தார். நாட்டில் மீண்டும் பிரிவினை வாதத்தை ஏற்படுத்த முயற்சி செய்பவர்களை தேடும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது இங்குள்ள சாதாரண பொது மக்களுக்கு எந்தவித பாதிப்புக்களையும் ஏற்படுத்தாது என்றார்.
இதனால், மீண்டும் பயங்கரவாதம் தலை தூக்கும் என்றோ இராணுவத்தின் கெடுபிடிகள் அதிகரிக்கும் என்றோ எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நேற்று கிளிநொச்சியில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள ஒத்துழைப்பு மத்திய நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது இராணுவத் தளபதி மேலும் உரையாற்றுகையில்:-
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க முயற்சிக்கின்றது. இதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டே இராணுவத்தினர் செயற்படுகின்றனரே தவிர நாட்டின் சிவில் நிர்வாகத்தில் ஒருபோதும் தலையிடுவதில்லை. அவ்வாறான தேவை ஏதும் கிடையாது.
தேசிய பாதுகாப்பே எமக்கு மிக முக்கியமானதும், பிரதானமானதுமாகும். வெளிநாடுகளில் இருக்கும் பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத குழுக்கள் இங்கு மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கப்போவதில்லை.
இவ்வாறு செயற்படுபவர்களை தேடிக்கண்டு பிடிக்கும் நடவடிக்கைகளிலேயே இராணுவம் ஈடுபட்டுவருகிறது. தேசத்துரோக சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பொதுமக்கள் உரிய முறையில் தகவல்களை வழங்கும் பட்சத்தில் அவ்வாறானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டங்கள், செயற்பாடுகள் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன்.
கிளிநொச்சியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பிரதான சந்தேக நபர்களை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இது சாதாரண பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பாகவும் அமையாது. இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாத ஒன்றாகும்.