காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர் வரும் ஏப்ரல் 2ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்போவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட வலிமையான வேட்பாளரை நிறுத்த பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது. இந்துத்துவா தலைவர் உமா பாரதி மட்டுமே சோனியாவை எதிர்க்கும் வேட்பாளர் என பா.ஜ.க. ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஏற்கனவே ஜான்சி மக்களவை தொகுதியின் வேட்பாளராக உமா பாரதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சோனியாவை எதிர்த்து நிற்க வைப்பதற்காக அவருக்கு தொகுதியை மாற்றி ரேபரேலி தொகுதியில் அவரை போட்டியிட வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
சமூக ஆர்வலர் யோகாகுரு பாபா ராம்தே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ரேபரேலி தொகுதியில் சோனியாவை எதிர்த்து போட்டியிட உமா பாரதியே மிகச்சரியான நபர் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். எனவே இம்முறை சோனியா காந்தி கடும் சவாலை சந்திக்க வேண்டிய நிலை வரும் என கூறப்படுகிறது.