கைது செய்யப்பட்டு சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்ட சிறுமி விபூசிகாவை தொடர்ந்தும் மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்திலேயே வைத்திருக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டு காணாமல் போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டத்தின் போது தனது சகோதரனை தேடி தருமாறு கோரி சிறுமி விபூசிகா மற்றும் அவரது தாயார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அதனை தொடர்ந்து கிளிநொச்சியில் இடம்பெற்ற பொலீஸ் உத்தியோகஸ்தர் மீதான துப்பாகி சூட்டு சம்பவத்தின் பின்னர், சந்தேக நபர் எனப்படும் கோபி இவர்களுடைய வீட்டிலேயே தங்கியிருந்ததாக கூறி சிறுமி விபூசிகா மற்றும் தாயார் பாலேந்திரன் ஜெயக்குமாரி ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தாயார் பாலேந்திரன் ஜெயக்குமாரியை விசாரணைகளுக்காக பூஸா முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், சிறுமியை யாரும் பொறுப்பேற்க முன்வரவில்லை என கூறி நீதிமன்ற உத்தரவின் பேரில் கிளிநொச்சியில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.
நேற்றய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, சிறுமியை தொடர்ந்தும் சிறுவர் இல்லத்திலேயே வைத்து பராமரிக்குமாறு கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.