நேற்று காலை அமெரிக்க ராணுவ தளத்திற்குள் ஒருவர் புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்திவிட்டு பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்த இவான்லோபாஸ் என்ற 34 வயது ராணுவ அதிகாரி, நேற்று திடீரென போர்ட் ஹூட் என்ற ராணுவதளத்திற்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். அவர் இராணுவ உடையில் வந்ததால் அவரை யாரும் சந்தேகப்படவில்லை.
போர்ட் ஹூட்டில் துப்பாக்கி சூடு நடத்திய பின்னர் காரில் ஏறி அருகில் இருந்த போக்குவரத்து படையினர் இருந்த கட்டிடத்திற்கு சென்று அங்கும் துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தில் 4 அமெரிக்க வீரர்கள் பலியாகினர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர். ராணுவ அதிகாரிகள் திருப்பி தாக்கியதால் நிலைகுலைந்த இவான் லோபஸ் வேறு வழியில்லாமல் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் ராணுவ தளம் உடனடியாக மூடப்பட்டது. உயர் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ராணுவ தளபதி மார்க் மில்லே., ” இந்தத் துப்பாக்கிச்சூட்டினை நடத்திய வீரர் இவான் லோபஸ், ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தில் 2011ம் ஆண்டு பணியாற்றியவர் ஆவார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு> சிகிச்சைகள் பெற்றுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டின் உள்நோக்கம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. இது தீவிரவாதம் தொடர்பான சம்பவமும் அல்ல. அதே நேரத்தில் தீவிரவாத தொடர்பு இருக்க வாய்ப்பே இல்லை என்றும் நிராகரிக்கவில்லை. ராணுவ போலீஸ் அதிகாரி தடுத்து நிறுத்திய போது அவருடனும் லோபஸ் மோதி உள்ளார். பின்னர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு உயிர் இழந்து இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஒபாமா மற்றும் ராணுவ மந்திரி சக் ஹேகல் ஆகியோர் ராணுவ உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினர். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக தரமான சிகிச்சை அளிக்கவும், மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி செய்யவும் முடிவு செய்யப்பட்டதோடு, பாதுகாப்பை பலப்படுத்தவும் பல ஆலோசனை செய்யப்பட்டது.