கடந்த 2010ல், இந்தியாவின் பா.ஜ., உட்பட, உலக நாடுகளின் ஐந்து அரசியல் கட்சிகளை அமெரிக்க உளவு அமைப்பான, என்.எஸ்.ஏ., உளவு பார்த்துள்ள தகவலை, அந்நாட்டின், ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பிரபலமான, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை நேற்று முன்தினம் வெளியிட்ட செய்தி ஒன்றில், ‘அமெரிக்க உளவு அமைப்பான, என்.எஸ்.ஏ., இந்தியாவின், பா.ஜ., உட்பட, உலக நாடுகளின் ஐந்து அரசியல் கட்சிகளை உளவு பார்த்துள்ளது. இதற்கான அனுமதியை, 2010ல், அந்த அமைப்பு, அமெரிக்க கோர்ட்டிடம் பெற்றுள்ளது’ என, தெரிவித்துள்ளது. இந்தியாவின் பா.ஜ., எகிப்தின் இஸ்லாமிய சகோதரத்துவ கட்சி, லெபனானின் அமால், வெனிசுலா நாட்டின், பொலிவாரியன் கான்டிநென்டல் கோஆர்டினேடர், பாகிஸ்தானின், பாகிஸ்தான் மக்கள் கட்சி, ஆகிய ஐந்து கட்சிகளின் நடவடிக்கைகளை அமெரிக்கா உளவு பார்த்துள்ளது. இதற்காக அந்நாட்டின், வெளிநாட்டு உளவு, கண்காணிப்பு நீதிமன்றத்தின் அனுமதியை, என்.எஸ்.ஏ., பெற்றுள்ளது. இதுகுறித்து, அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ.,) செய்தித் தொடர்பாளர், வானீ வைன்ஸ் கூறுகையில், ”அமெரிக்க அதிபர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த உளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான காரணம் என்ன என்பதை தெரிவிக்க இயலாது,” என்றார்.