இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளைய வாரிசான, இளவரசர் ஜார்ஜ், நாளை, தன் முதல் பிறந்த நாளை கொண்டாட உள்ளது. அதற்காக, கென்சிங்டன் அரண்மனையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இங்கிலாந்து ராணி, இரண்டாம் எலிசபெத் இளவரசர் பிலிப் தம்பதியின் மூத்த மகன், இளவரசர் சார்லஸ் டயானா தம்பதிக்கு, வில்லியம், ஹாரி என 2 மகன்கள். 2011ல் வில்லியம், தன் பள்ளித்தோழி கேட் மிடில்டனை மணந்தார். இந்த தம்பதிக்கு, ஒரு வயதில், ஜார்ஜ் என்ற பெயரில் மகன் உள்ளான். ‘இளவரசர் ஜார்ஜ்’ என அழைக்கப்படும் அந்தக் குழந்தை, கடந்த ஆண்டு, ஜூலை 22 ல் லண்டனில் பிறந்தது.
அதன் முதல் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக, லண்டன் நகரில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் விரிவான பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் பிறந்த நாளை கொண்டாடும் ஜார்ஜை கவுரவிக்கும் வகையில், லண்டன் பத்திரிகைகள், அக்குழந்தையின் படத்தை, தங்கள் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியிட்டு, ராஜ விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகின்றன.