பிரிட்டனைச் சேர்ந்த, 12 வயது சிறுவன், திடீரென பசி, தாகத்தை இழந்த விஷயம், மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வாட்டலூ பகுதியில் வசிக்கும் மைக்கேல் மற்றும் டெபியின் மகன் லாண்டன் ஜோன்ஸ், 12. கடந்த ஆண்டு, அக்., 14ம் தேதி இரவு, தனக்கு பிடித்தமான பீட்சா மற்றும் ஐஸ்கிரீமை சாப்பிட்டு விட்டு தூங்கினான். மறுநாள் எழுந்தபோது, பசி, தாகத்தை இழந்திருந்தான். அன்றிலிருந்து அவன் சாப்பிடுவதில்லை. இதனால், அவன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சோர்வடைந்தான். மார்பு சளியால் அவதிப்பட்ட லாண்டனுக்கு, 24 மணி நேரமும் தலைச்சுற்றல் ஏற்பட்டது.
மகனின் நிலையைக் கண்ட அவனது பெற்றோர், லண்டனில் உள்ள மாயோ மருத்துவமனையின் குழந்தைகள் நியூராலஜி டாக்டர் பேட்டர்சன்னிடம் அழைத்துச் சென்றனர். 33 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த டாக்டர் பேட்டர்சன், லாண்டனை பரிசோதனை செய்து, நோய் எதிர்ப்பு மருந்து களையும், பசியை உண்டாக்குவதற்கான மருந்தையும் அளித்தார்.
இருந்தும் லாண்டனுக்கு பசி, தாகம் போன்ற உணர்வுகள் ஏற்படவில்லை. இதையடுத்து, அமெரிக்காவின் செடார் ராப்பிட்ஸ், டெஸ் மாய்ன்ஸ் மற்றும் மாடிசன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக, லாண்டனை அனுமதித்தனர். அங்கே ரத்தப் பரிசோதனைகள், ஸ்கேன், எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி உள்ளிட்ட அனைத்து சோதனைகளும் செய்து, மருந்துகள் அளிக்கப்பட்டன. அனைத்து முயற்சிகளுக்குப் பிறகு, சக மாணவர்கள் உணவருந்துவதைப் பார்த்தால், ஒரு துண்டு சாண்ட்விச்சும், சிறிதளவு தண்ணீரும் குடிப்பான். இதன் காரணமாக, 106 பவுண்டாக இருந்த அவனது உடல் எடை, 68 பவுண்டாக குறைந்து, நோயாளியைப் போன்று காட்சியளிக்கிறான். அவனது மூளையின் அடிப்பகுதியில் உள்ள உணர்வுகளைத் தூண்டும் பகுதி பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதால், நேரடியாக குழாய் மூலம் உணவு செலுத்தும் முயற்சி செய்யப்படுகிறது. பொதுமக்கள் அளிக்கும் நிதியுதவியில், லாண்டனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரிய நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிக்கும், அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம், லாண்டன் ஜோன்சின் நோய் குறித்து ஆய்வு செய்ய பரிசீலித்துள்ளது