வங்காள தேசத்தில் கடந்த 1991–96, 2001–06 காலகட்டங்களில் பிரதமர் பதவி வகித்தவர், கலிதா ஜியா (வயது 69).
2001–06 ஆண்டுகளில், இவர் தனது மறைந்த கணவர் ஜியா பெயரில் இரண்டு அறக்கட்டளைகளை பெயரளவுக்கு நடத்தி, பெருமளவு பணம் குவித்து விட்டதாக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது 2 ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் அவருக்கு எதிராக கடந்த மார்ச் மாதம், டாக்காவில் உள்ள 3–வது மெட்ரோபாலிட்டன் கோர்ட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்தது.
இதை எதிர்த்து அவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த ஐகோர்ட்டு, விசாரணை நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது சரிதான் என கூறி, கலிதா ஜியாவின் வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்–முறையீடு செய்தார். இந்த மேல்–முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி முஜாம்மல் உசேன் தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிவில், கலிதா ஜியாவின் அப்பீல் வழக்கை தள்ளுபடி செய்தும், விசாரணை நீதிமன்றம் வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தவும் உத்தரவிட்டு நீதிபதிகள் நேற்று தீர்ப்பு அளித்தனர்.
இந்த தீர்ப்பு கலிதா ஜியாவுக்கு பெருத்த அடியாக அமைந்து விட்டது. அவர் சட்டப்படி இந்த ஊழல் வழக்குகளின் விசாரணையை எதிர்கொண்டாக வேண்டும். இந்த வழக்குகளில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை வரலாம் என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.