0
வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்து வருவதாக ஊழியர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவு தொழிற்சங்கம் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
18 ஆம் திகதி சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் முத்தையா மண்டபத்தில் இடம்பெற்றபோது சங்கத்தின் உப தலைவரான க. சிவசேகரம் கூட்டத்தில் பங்கு பற்றி அனைத்து பொதுச்சபை உறுப்பினர்கள் முன்னிலையிலும் சங்கத்தின் பொது முகாமையாளர், கணக்காளர் மற்றும் ஏனைய பணியாளர்கள் வினைத்திறன் அற்றவர்கள் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
எனவே இதனை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் அதற்கு உரிய தீர்வு பெற்றுத்தருமாறு கோருவதுடன் தீர்வு கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் 23 அம் திகதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் பணி பகிஸ்கரிப்பை மேற்கொள்ள வேண்டுமென கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கம் ஏக மனதாக தீர்மானித்துள்ளது என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இக் கடிதத்தின் பிரதிகள் வவுனியா அரசாங்க அதிபர், வட மாகாண கூட்டுறவு ஊழியர் தொழிற்சங்கம், வவுனியா மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.