இஸ்லாமிய நாடுகளுடன் இணைந்து மதப் பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுள்ளது.
பிரான்ஸிலிருந்து வெளியாகும் “சார்லி ஹெப்டோ’ வார இதழ், இஸ்லாம் உள்ளிட்ட பல்வேறு மதங்கள் குறித்த கேலிச் சித்திரங்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தது.
இந்த நிலையில், இம்மாதம் 7-ஆம் தேதி பாரிஸிலுள்ள அந்தப் பத்திரிகை அலுவலகத்துக்குள் இரு பயங்கரவாதிகள் நுழைந்து அங்கிருந்த ஆசிரியர் குழுவினர், ஊழியர்கள், போலீஸார் உள்ளிட்ட 12 பேரை சுட்டுக் கொன்றனர்.
முகமது நபி குறித்து சார்லி ஹெப்டோவில் வெளியான கேலிச் சித்திரங்களுக்குப் பழி வாங்கும் வகையில் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக பயங்கரவாதிகள் அப்போது கூச்சலிட்டனர்.
இந்தத் தாக்குதலையும், அதனைத் தொடர்ந்து மற்றொரு பயங்கரவாதி நிகழ்த்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதையும் கண்டித்து ஐரோப்பிய நாடுகளில் ஊர்வலங்கள் நடைபெற்றன.
பிரான்ஸ் மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
இந்தச் சூழலில், ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களையும், அரபு லீக் அமைப்பின் தலைவர் நபில் அல்-அரபியையும் ஐரோப்பிய யூனியன் வெளிவிவகாரக் கொள்கை ஒருங்கிணைப்பாளர் ஃபெடரிகா மோகேரினி, பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் திங்கள்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது:
பயங்கரவாதத்தை வேரறுப்பதில், ஐரோப்பிய நாடுகளும், இஸ்லாமிய நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் தற்போது உணரப்பட்டுள்ளது.
எனவே, குறிப்பிட்ட நாடுகளுடன் ஒருங்கிணைந்து, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான செயல்திட்டங்களை இன்னும் சில வாரங்களுக்குள் வகுக்க முடிவு செய்துள்ளோம்.
இதன்படி, துருக்கி, எகிப்து, யேமன், அல்ஜீரியா, வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளுடன், உளவுத் தகவல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.