தமிழ் மக்களுக்கான கல்வி, கலை, கலாசாரத்தை மையமாகக்கொண்டு அவற்றை வளர்க்கும் நோக்குடன் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் தமிழர் முன்னேற்றகழகம் அமைப்பானது 21.12.2014 அன்று வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களை ஒன்றினைத்து அவற்றுக்கான சேவையினை வழங்குவதற்கான நிகழ்வு கிடாச்சூரிப் பிரதேசத்தில் நடைபெற்றது.
தமிழர் முன்னேற்ற கழகத்தின் அலுவலக கட்டடம் ஒன்றும் பிரதம அமைப்பாளரினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய கழகத்தின் பிரதம அமைப்பாளர் ஜனகன் தற்போது எமது பிரதேசங்களில் உள்ள மாபெரும் பிரச்சினையாக இந்த மொழிப் பிரச்சினை காணப்படுகின்றது. கடந்த காலங்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் நாம்அதனை கவனிக்காது விட்டுவிட்டோம். தற்போது எங்களுடைய அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே ஆங்கில மொழி தேவையாக உள்ளது.
எங்களுடைய சிறார்கள் இனி தமிழோடு ஆங்கிலத்தையும் கற்க வேண்டும். ஆங்கிலத்தை படிப்பாக பார்க்காமல் அதனை ஒருமொழியாக பார்க்க வையுங்கள். எங்களுடைய சிறார்கள; இளைஞர்கள் இனி அரசியலை கூட ஆங்கிலத்தில் பேசும் அளவிற்கு அவர்களை நாம் வளர்க்க வேண்டும். அதற்கான களமாக தமிழர்முன்னேற்றக் கழகம் உங்களுக்கு இலவசமாக ஆங்கிலக்கல்வியை வழங்க உள்ளது. அத்தோடு இலவசமாக கணனிப்பயிற்சியையும் வழங்கத்தீர்மானித்துள்ளது. இதற்காக பிள்ளைகளுடன் பெற்றோர்களாகிய உங்கள்ஒத்துளைப்பும் அவசியம் எனவும் எதிர்காலத்தில் இப்பிரதேச பிள்ளைகள்கல்வியில் சிறந்தவர்களாக மிளிரவேண்டும் அதற்கான முழு உதவிகளையும் தமிழர் முன்னேற்றக்கழகம் ஏற்படுத்திக் கொடுக்கும் என தெரிவித்தார். இந்நிகழ்வின் போது பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த கிராமஅமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் தமிழர் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து அதன் செயற்பாடுகளுக்கு ஒத்துளைப்பு வழங்குவதாகத் தெரிவித்தன.