ஜோர்டான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் பயங்கரவாதி சஜிதா உள்ளிட்ட இரு பயங்கரவாதிகளின் மரண தண்டனையை அந்நாடு புதன்கிழமை காலையில் நிறைவேற்றியது.
இராக்கைச் சேர்ந்த பெண் பயங்கரவாதி சஜிதா அல்-ரிஷாவி மற்றும் ஜியாத் அல்-கார்போலி ஆகிய இருவரும் உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு (இந்திய நேரப்படி காலை சுமார் 7.30 மணி) தூக்கிலிடப்பட்டனர்.
தலைநகர் அம்மானுக்குத் தெற்கே உள்ள ஸ்வாக்கா சிறையில், இஸ்லாமிய சட்ட நிபுணர் முன்னிலையில், இவர்கள் இருவரும் தூக்கிலிடப்பட்டனர்.
ஜோர்டான் விமானப் படை விமானி மாஸ் அல்-கஸஸ்பே உயிருடன் எரித்துப் படுகொலை செய்யப்படும் விடியோ உறுதி செய்யப்பட்டால், பயங்கரவாதிகளுக்குத் தக்க பதிலடி தரப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து, அந்நாட்டின் சிறையிலுள்ள 2 பயங்கரவாதிகளின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அம்மானில் விடுதியொன்றில் 2005-ஆம் ஆண்டு நவம்பரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் சஜிதா அல்-ரிஷாவி (44). அவரும் அவரது கணவரும் இந்தத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.
சஜிதாவின் உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை அவரால் வெடிக்கச் செய்ய இயலவில்லை. எனினும் அவரது கணவர் குண்டு வெடிப்பு நிகழ்த்தியதில் 38 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் சஜிதாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அதே நாள் 3 விடுதிகளில் ஒருங்கிணைந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 60 பேர் உயிரிழந்தனர்.
சஜிதாவுடன் தூக்கிலிடப்பட்ட ஜியாத் அல்-கார்போலி மீது பயங்கரவாதம் தொடர்பாக ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன.
ஐ.எஸ்.ûஸ முறியடிப்போம் –
ஜோர்டான் அரசர்: கொல்லப்பட்ட போர் விமானியைத் தியாகி என ஜோர்டான் அரசர் அப்துல்லா புகழ்ந்தார். அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள மன்னர் அப்துல்லா சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் அவ்வாறு தெரிவித்தார்.
ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை முறியடிப்போம் எனக் கூறிய அவர், ஜோர்டானின் பதிலடி இந்த பூமியைக் குலுங்கச் செய்யும் என்றார்.