பொலிசாரால் தேடப்பட்டு வந்த வவுனியா பூந்தோட்டத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் 10 பேர் நேற்று 06-02-2015 வவுனியா பொலிசில் சரணடைந்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 5 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது கடந்த 10 நாட்களுக்கு முன் வவுனியா பூந்தோட்டத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி நான்கு முஸ்லிம் இளைஞர்கள் சேர்ந்து தமிழ் இளைஞர் ஒருவரை தாக்கி கொலைசெய்யும் நோக்கில் வவுனியா குளத்தினுள் வீசியுள்ளனர். குறித்த தமிழ் இளைஞர் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூன்று நாள் கோமாநிலையிலிருந்து மீண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஆத்திரமடைந்த பூந்தோட்டத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் முஸ்லிம் இளைஞர்களை தாக்கியுள்ளனர். இந்த விடயத்தில் தலையிட்ட முஸ்லிம் அமைச்சர் ரிசாட் பதியுதீன் நடந்த உண்மையை விசாரிக்காமல் பொறுப்பற்ற விதத்தில் பொலிசாரை ஏவிவிட்டு உடனடியாகவே தாஸ்,தீபன் என்ற இரு இளைஞர்களை கைது செய்திருந்தது வவுனியா பொலிஸ். அத்துடன் இரவிரவாக தமிழர்களின் வீடுகளுக்கு சென்ற பொலிஸ் சி.ஜ.டி. யினர் பெண்களை மிரட்டுவதும் எச்சரிப்பதுமாக செயற்பட்டிருந்தனர்.
இதற்கெல்லாம் காரணமான முஸ்லிம் இளைஞர்களான அஸ்மீர்,இம்ரான்,முனாப்,ரம்சின் ஆகியோர் பொலிசாரினால் கைதுசெய்யப்படவில்லை என்பதுடன் இந்த நால்வரும் திருட்டு சம்பவம் ஒன்றில் பொலிசாரால் தேடப்பட்டுவரும் குற்றவாளிகளாவர். இவர்கள் அமைச்சர் ரிசாட்டின் அடியாட்கள் என்ற காரணத்தினால் பொலிசார் இவர்களை கைது செய்யவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் பொலிசாரின் பொறுப்பற்ற நடவடிக்கை இரு இனங்களுக்கிடையில் மேலும் பிளவுகளை உருவாக்குமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சர் ரிசாட் பதியுதீன் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தை தாக்கி நீதிபதியை மிரட்டியிருந்தமையும் அதற்காக உயர்நீதிமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது