கொரோனா அபாயம் உள்ள கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரையும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக ஏற்றிவந்த லொறி சாரதியையும் விடத்தற்பளை படைமுகாம் தனிமை மையத்தில் வைத்து கண்காணிக்க நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இதனால் குறித்த நபர்களினால் யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் உள்ளதால் இவர்கள் தங்கியுள்ள வீட்டில் உள்ளவர்களையும் அவர்கள் தங்கியுள்ள வீட்டிலேயே தனிமைப்படுத்தி அடுத்த மூன்று வார காலத்திற்கு பாதுகாப்பு படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன்
கண்காணிக்கப்படுவார்கள் என சுகாதாரசேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
மேலும், வேறு மாகாணங்களில் இருந்து குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட
பிரதேசங்களிலிருந்து அனுமதியின்றி உங்கள் பிரதேசத்திற்கு யாராவது வருகை தந்தால் உடனடியாக அவர்கள் பற்றிய விபரங்களை உங்கள் பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி , சுகாதார உத்தியோகத்தர் கிராம உத்தியோகத்தர் ஆகியோரில் யாராவதொருவருக்கு தெரியப்படுத்தவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அவர்களை தொடர்புகொள்வதில் சிரமம் இருப்பின் எமது மாகாண சுகாதாரசேவைகள் பணிமனை அவசர அழைப்பெண்ணான 021 222 6666 க்கு தொடர்பு கொண்டு அவர்களைப்பற்றிய தகவல்களை வழங்கவும்.எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.