இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவத் தொடங்கிய நிலையில் அந்நாட்டு சுகாதார அமைச்சு சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவிக்கின்றது.
கடந்த சில நாட்களாக 3000க்கும் அதிகமானோர் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக சந்தேகம் இருந்தால் ஆன்ட்டி பயோட்டிக் மாத்திரைகளை பயன்படுத்தக் கூடாது என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், மருத்துவர்களும் கொரோனா பாதிப்புக்கு இணை பாதிப்புகள் குறித்து கவனமாக செயல்படும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மிதமான நோய்க்கூறு இருப்பவர்களுக்கு ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்து வருகின்றன.
ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று பரவி வரும் தகவல் தவறானது என்றும் அதுபோன்ற எண்ணம் எதுவும் தமிழக அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தை பொறுத்தவரை கட்டுக்குள் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.