நேர்காணல்:- ஆர்.ராம்.
பாரிய மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் ,அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் கட்டமைப்புக்கள் அமெரிக்க அரச திணைக்களத்தின் நிதி உதவியினை பெற்றுக்கொள்ள முடியாது என்பது அந்த நாட்டின் சட்டம் என்பதனடிப்படையில், இலங்கை இராணுவத்தின் தளபதி கறைபடிந்தவராக கருதப்படுவதால் முழு இலங்கை இராணுவமுமே அமெரிக்க உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றது என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வீரகேசரிக்கு மின்னஞ்சல் ஊடாக வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
அச் செவ்வியின் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- ஆதாரங்கள் சேகரிக்கும் பொறிமுறையொன்றை உருவாக்குவது பற்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானம் குறிப்பிட்டிருக்கின்ற நிலையில் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வளவு முக்கியமானதாகிறது?
பதில்:- இதுவொரு முக்கியமான முன்னோக்கிய படி, ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விடயம் இதுவல்ல, இதுவொரு நீண்ட நிச்சயமற்ற செயற்திட்டத்தின் ஆரம்பமாகும்.
பொறுப்புக்கூறல் மற்றும் நிலைமாறுகால நீதிக்கான உள்நாட்டு செயல்முறைகள் தோல்வியடைந்திருப்பதை இந்தத் தீர்மானம் அங்கீகரிப்பதாக உள்ளது. இலங்கை அரசாங்கமானது கடந்த காலத்தில் இடம்பெற்ற குற்றங்களை உள்நாட்டில் விசாரணைக்கு உட்படுத்தி வழக்குத் தொடர்வதற்கான முதன்மையான பொறுப்பினைக் கொண்டிருக்கின்ற அதேவேளையில் அதனைச் செய்ய இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என்பதனை ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம் ஏற்றுக்கொள்கிறது.
இலங்கையானது பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான விருப்பத்தைக் கொண்டிருக்காமையே சர்வதேச சமூகம் அவ்விடயத்தை கையிலெடுத்திருப்பதற்கான முக்கிய காரணமாகும்.
கேள்வி:- ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையின் செயற்பாடுகளை குறிப்பிடுங்கள்?
பதில்:– இந்த சுயாதீனப் பொறிமுறை என்பது ஒரு வழக்கறிஞர் அலுவலகமோ அல்லது ஒரு நீதிமன்றமோ இல்லை என்பதை முதலில் விளங்கிக்கொள்ளுதல் முக்கியமானது. அது குற்றவாளிகளை விசாரிப்பதுமில்லை அத்துடன் வழக்குதொடரப் போவதும் இல்லை. இந்தப் பொறிமுறையானது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் மற்றும்
தகவல்களைச் சேகரிப்பதுடன் அது தேசிய, பிராந்திய அல்லது சர்வதேச நீதிமன்றங்களில் அல்லது தீர்ப்பாயங்களில் எதிர்கால குற்றவியல் வழக்குகளுக்கு உதவுவதற்கான வழிகளை கண்டுபிடிப்பதற்கு பகுப்பாய்வு செய்யும். மேலும் உறுதி செய்யப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றங்களும் தீர்ப்பாயங்களும் குற்றங்கள் தொடர்பில் சட்ட அதிகாரத்தைக் கொண்டதாக எதிர்காலத்தில் உருவாக்கப்படலாம்.
கேள்வி:- சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத இக் கட்டமைப்பினைப் பயன்படுத்தி எந்த இலக்கை அடையலாம்?
பதில்:- நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு அல்லது சர்வதேசக் குற்ற வழக்கினை உருவாக்குவதற்கு பரவலான அல்லது திட்டமிட்ட தாக்குதல்களுடன் அடிக்கடி தொடர்புபட்ட விரிவான கட்டமைப்பின் ஒரு பகுதியாக இழைக்கப்பட்ட சிக்கலான குற்றங்கள் பற்றியதொரு ஆய்வு அவசியமாகிறது.
வழமையாக தனிப்பட்ட நபர்களின் குற்றவியல் பொறுப்பினை நிரூபிப்பதற்கு குறிப்பிட்ட காலத்தில் மற்றும் இடத்தில் நடத்தை வடிவங்கள் பற்றிய மதிப்பீடும் அத்துடன் சிக்கலான வலையமைப்புகளில் முறையான மற்றும் முறைசாராத தொடர்புகள் பற்றிய மதிப்பீடும் அவசியமாகிறது.
பல சிவில் சமூக அமைப்புக்கள் குறிப்பிட்டதொரு புவியியல் அல்லது ஆய்வுப் பகுதி சார்ந்த நிபுணத்துவத்தைக் கொண்டிருக்கும் அதேவேளையில் பூரணமானதொரு வழக்குக்கோவையை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து ஆதாரங்களையும் கொண்டிருப்பது சாத்தியமில்லை.