இந்தியா – அவுஸ்ரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பகல் இரவு போட்டியாக அடிலெய்டில் நாளை (வியாழக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை அவுஸ்ரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 இருபது தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
அடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. இந்திய அணி அவுஸ்ரேலியாவில் முதல் முறையாக பிங்க் பந்து (இளம் சிவப்பு) போட்டியில் விளையாடவுள்ளது. அதாவது முதல் முறையாக பகல் இரவு டெஸ்டில் விளையாடுகிறது.
ஒட்டு மொத்தத்தில் இந்திய அணி விளையாடும் 2-வது பகல் இரவு டெஸ்ட் ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சொந்த மண்ணில் பங்களாதேஸ் அணிக்கெதிராக எதிராக பிங்க் நிற பந்தில் விளையாடிருந்தது.
இந்திய அணி அவுஸ்ரேலிய மண்ணில் ஒரே ஒரு முறைதான் டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. 2018-19 ஆண்டில் விராட் கோலி தலைமையிலான அணி 4 டெஸ்ட் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனால் தற்போதைய இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு நாடு திரும்புகிறார். இது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.