வீதி பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரின், 14ஆவது லீக் போட்டியில் இலங்கை ஜாம்பவான்கள் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
ராய்பூர் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை ஜாம்பவான்கள் அணியும் இங்கிலாந்து ஜாம்பவான்கள் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை ஜாம்பவான்கள் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ஜாம்பவான்கள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ட்ரெம்ளட் 22 ஓட்டங்களையும் ட்ராட்டன் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில், டில்சான் 4 விக்கெட்டுகளையும் ரங்கன ஹெரத் 2 விக்கெட்டுகளையும் வீரரத்ன, ஆர்னல்ட் மற்றும் மஹாரூப் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 79 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை ஜாம்பவான்கள் அணி, 7.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டில்சான் 61 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இங்கிலாந்து ஜாம்பவான்கள் அணியின் பந்துவீச்சில், பென்சார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக டில்சான் 4 விக்கெட்டுகளையும் 61 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட டில்சான் தெரிவுசெய்யப்பட்டார்.