பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி ஆரம்பிப்பதற்கு சிறிது நேரமே இருந்தவேளையில் பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை நிறுத்துவதற்கு நியூஸிலாந்து தீர்மானித்தது. பாதுகாப்பு விடயத்தை காரணம் காட்டி இந்த தீர்மானத்தை எடுத்ததாக நியூஸிலாந்து கிரிக்கெட் சபை தெரிவிக்கிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானிலிருந்து திடீரென வெளியேற எடுத்த முடிவு முழு உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி நேற்று (17) ராவல்பிண்டியில் ஆரம்பமாகவிருந்தது.
இந்நிலையில், இப்போட்டி ஆரம்பமாவதற்கு சில நிமிடங்கள் இருந்தவேளையில், பாகிஸ்தானிலிருந்து வெளியேறுவதற்கு நியூஸிலாந்து கிரிக்கெட் அணி தயாரானது.
இதற்கான காரணத்தை நியூஸிலாந்து கிரிக்கெட் சபை தெரிவிக்காதபோதும், 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடரை இரத்து செய்து பாகிஸ்தானிலிருந்து வெளியேற தீர்மானித்தது.
“இப்போட்டித் தொடரிலிருந்து நாம் வெளியேறுவது பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு பெரும் ஏமாற்றமாகும். எனினும், வீரர்களின் பாதுகாப்பே எமக்கு பிரதானமாகும்” என நியூஸிலாந்து கிரிக்கெட் சபையின் பிரதான நிறைவேற்ற அதிகாரி டேவிட் வைட் தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.