வெலிங்டன் பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற மேற்கிந்தயத் திவுகளுக்கு எதிராக மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலியா 7 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றியீட்டியது.
இதன் மூலம் அவுஸ்திரேலியா தனது நான்கு போட்டிகளிலும் வெற்றியீட்டி 8 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றது.
மறுபுறத்தில் நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக சுற்றுப்போட்டியின் ஆரம்பித்தில் எதிர்பாராத வெற்றிகளை ஈட்டிய மேற்கிந்தியத் தீவுகள் அதன் பின்னர் 2 போட்டிகளிலும் தோல்விகளைத் தழுவியுள்ளது.
எலிஸ் பெரியின் துல்லியமான பந்துவீச்சும் ரஷேல் ஹெய்ன்ஸின் அபார துடுப்பாட்டமும் அவுஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
இந்தப் போட்டிவரை தோல்வி அடையாமல் இருக்கும் முன்னாள் சம்பியனான அவுஸ்திரேலியாவுக்கு இம்முறை அரை இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற மேலும் 2 வெற்றிகளே தேவைப்படுகின்றது.
மேற்கிந்தியத் தீவுகளை 45.5 ஓவர்களில் 131 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய அவுஸ்திரேலியா கிட்டத்தட்ட 20 ஓவர்கள் மீதமிருக்க வெற்றி இலக்கை கடந்தது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தமை எவ்வளவு பெரிய தவறு என்பது மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2ஆவது ஓவரிலேயே புரிந்துவிட்டது.
எல்சி பெரி வீசிய அந்த ஓவரில் ஹேலி மெத்யூஸ் (0), கய்சியா நைட் (0) ஆகிய இருவரும் ஆட்டமிழந்தமையும் தொடர்ந்து 10ஆவது ஓவரில் அதிரடி வீராங்கனை டியேந்த்ரா டொட்டின் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமையும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.
அணித் தலைவி ஸ்டெபானி டெய்லர் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 50 ஓட்டங்களைப் பெற்றிராவிட்டால் மேற்கிந்தியத் தீவுகள் மேலும் மோசமான நிலையை அடைந்திருக்கும்.
மற்றைய வீராங்கனைகளில் சினெல் ஹென்றி (10), ஆலியா அலின் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொட்டனர்.
அவுஸ்திரேலிய பந்துவீச்சில் எலிஸ் பெரி 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஷ்லி கார்ட்னர் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெஸ் ஜொனாசன் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
132 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 30.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்று வெற்றீயீட்டியது.
அவுஸ்திரேலிய இன்னிங்ஸ் ஆரம்பத்தில் அலிஸா ஹலீ (3), அணித் தலைவி மெக் லெனிங் (0), எலிஸ் பெரி (10) ஆகியோர் ஆட்டமிழந்தபோது (58 – 3 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் வீராங்கனைகள் ஆனந்தத்தில் மிதந்தனர்.
ஆனால், ரஷேல் ஹெய்ன்ஸ், பெத் மூனி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.
ரஷேல் ஹெய்ன்ஸ் 9 பவுண்ட்றிகள் அடங்களாக 83 ஓட்டங்களுடனும் பெத் மூனி 28 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.