Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு 20 வயதின் கீழ் ஏ பிரிவு கூடைப்பந்தாட்டம் : புனித பேதுருவானர் கல்லூரிக்கு 3ஆம் இடம்

20 வயதின் கீழ் ஏ பிரிவு கூடைப்பந்தாட்டம் : புனித பேதுருவானர் கல்லூரிக்கு 3ஆம் இடம்

2 minutes read

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்பட்டுவரும் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஏ பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் பம்பலப்பிட்டி, புனித பேதுருவானவர் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்றது.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் புதன்கிழமை (18) மாலை நடைபெற்ற 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் கடும் சவாலை முறியடித்து 71 – 61 என்ற புள்ளிகள் கணக்கில் புனித பேதுருவானவர் வெற்றிபெற்றது.

இடைவேளையின்போது 27 – 25 என்ற புள்ளிகள் அடிப்படையில் டி.எஸ். சேனாநாயக்க முன்னிலையில் இருந்தது.

போட்டியின் 1ஆவது கால் மணி நேர ஆட்டத்தில் டி.எஸ்.எஸ். 17 – 11 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

2ஆவது கால் மணி ஆட்டத்தை 14 – 10 என புனித பேதுருவானவர் தனதாக்கிய போதிலும் இடைவேளையின்போது 27 – 25 என்ற புள்ளிகள் அடிப்படையில் டி.எஸ்.எஸ். முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திய புனித பேதுருவானவர் 3ஆவது ஆட்டநேர பகுதியை 22 – 14 என தனதாக்கி 47 – 41 என முன்னிலை வகித்தது.

கடைசி கால் மணி நேர ஆட்டத்திலும் திறமையை வெளிப்படுத்திய புனித பேதுருவானவர் அப் பகுதியை 24 – 20 என தனதாக்கி 71 – 61 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 3ஆம் இடத்தை உறுதிசெய்துகொண்டது.

இதேவேளை, ஏ பிரிவு பெண்களுக்கான 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியாஸ்திரிகள் மட கல்லூரியை 36 – 25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட நுகேகொடை புனித சூசையப்பர் மகளிர் கல்லூரி 3ஆம் இடத்தை தனதாக்கிக்கொண்டது.

பி பிரிவு ஆண்களுக்கான 3ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் வெஸ்லி கல்லூரியை 72 – 55 என்ற புள்ளிகள் அடிப்படையில் கலம்போ இன்டர்நெஷனல் ஸ்கூல் வெற்றிகொண்டு  3ஆம் இடத்தைப் பெற்றது.

இன்றைய தினம் ஏ, பி, சி ஆகிய 3 பிரவுகளில் இருபாலாருக்குமான 6 இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இன்று வியாழக்கிழமை (19) காலை நடைபெறும் சி பிரிவு பெண்களுக்கான இறுதிப் போட்டியில் யசோதராதேவி மகளிர் பாடசாலையும் குருநாகல் திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் கல்லூரியும் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

தொடரும் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியும் அம்பலாங்கொடை தர்மாஷோக்க கல்லூரியும் விளையாடவுள்ளன.

பி பிரிவு பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கொழும்பு மகளிர் கல்லூரியும் கண்டி ஹில்வூட் கல்லூரியும் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் வத்தளை ஓ கே சர்வதேச பாடசாலையும் இஸிபத்தன கல்லூரியும் பங்குபற்றவுள்ளன.

ஏ பிரிவில் இருபாலாருக்குமான இறுதிப் போட்டிகள் நாளை பிற்பகல் 1.50 மணியிலிருந்து நடைபெறும்.

பெண்களுக்கான இறுதிப் போட்டியில் பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் கல்லூரியை கண்டி மஹமாயா கல்லூரி சந்திக்கவுள்ளது.

தொடரும் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் மருதானை புனித சூசையப்பர் கல்லூரியை கொழும்பு றோயல் கல்லூரி எதிர்த்தாடும்.

ஏ பிரிவு இறுதிப் போடடிகள் முடிவடைந்த பின்னர் பரிசளிப்பு வைபவம் நடைபெறும்.

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்டப் போட்டிக்கு இந்த வருடம் கஜா ஹோல்டிங்ஸ் நிறுவனம் பூரண அனுசரணை வழங்குகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More