ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய சுப்பர் லீக் 4 நாள் இறுதிப் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தம்புளையை விட 222 ஓட்டங்களால் காலி பின்னிலையில் இருக்கிறது.
காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று (02) ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புளை அணி அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றது.
அபிஷேக் லியனஆராச்சி, மினோத் பானுக்க ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்களும் அவர்கள் இருவரும் வெவ்வேறு இணைப்பாட்டங்களில் 70 க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பகிர்ந்தமையும் அணியைப் பலப்படுத்தின.
54 ஓட்டங்களைப் பெற்ற ஆரம்ப வீரர் அபிஷேக், 2ஆவது விக்கெட்டில் பவன் ரத்நாயக்கவுடன் 77 ஓட்டங்களைப் பகிர்ந்தார். பவன் ரத்நாயக்கவின் பங்களிப்பு 31 ஓட்டங்களாகும்.
அதனைத் தொடர்ந்து மினோத் பானுக்க (50), சனோஜ் தர்ஷிக்க (37) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
இந்த நால்வரை விட பின்வரிசையில் துஷான் ஹேமன்த 27 ஓட்டங்களைப் பெற்றார்.
காலி பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் காலி அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 26 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருக்கிறது.