Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை அம்பாறை மாவட்டத்தில் சிறப்புற நடைபெற்ற தமிழ் மொழிப் பிரிவுக்கான கலாசார விழாக்கள்!

அம்பாறை மாவட்டத்தில் சிறப்புற நடைபெற்ற தமிழ் மொழிப் பிரிவுக்கான கலாசார விழாக்கள்!

2 minutes read

மனிதனது அன்றாட வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த கலைகளைப் பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலவல்கள் அமைச்சின் கீழியங்கும் கலாசார அலுவல்கள் திணைக்களம் காத்திரமான பங்களிப்பு நல்கி வருகின்றது. தற்பொழுது நிலவும் கொவிட்19 தொற்று பரவல் நிலைக்கு மத்தியிலும், கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட தமிழ்மொழிப் பிரிவுக்கான கலாசார விழாக்கள் நடைபெற்றமை வரலாற்றுப் பதிவாகும்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை, நிந்தவூர், திருக்கோவில், காரைதீவு, கல்முனை (தமிழ் பிரிவு), நாவிதன்வெளி, சாய்ந்தமருது, ஆலையடிவேம்பு, பொத்துவில், இறக்காமம் ஆகிய 13 தமிழ்மொழி கலாசாரப் பிரிவுகளை உள்ளடக்கியதாக இவ்விழாக்கள் நடாத்தப்பட்டதாக அம்பாறை மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.எம்.றின்ஸான் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட செயலாளர் டீ.எம்.எல்.பண்டாரநாயக்காவின் ஆலோசனை, வழிகாட்டலில் நடைபெற்ற இவ்விழாக்களில், அம்பாறை மேலதிக மாவட்டச் செயலாளர்கள் ஏ.எம்.அப்துல் லத்தீப், வீ.ஜெகதீஸன் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

விழாக்களில், பிரதேச கலை இலக்கியவாதிகள் பரிசு, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், தமிழ்மொழி மூல பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு திறமை காட்டிய மாணவர்கள் பரிசு, சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டு முதலாமிடம் பெற்று வெற்றியீட்டிய மாணவர்களின் ஆக்கங்களைத் தாங்கிய ‘இலக்கியம்’ விஷேட மலரும் இதன் போது வெளியிட்டு வைக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

“கலாசார விழாவையொட்டி. பாடசாலை மட்டத்தில் பிரதி வருடமும் நடைபெறும் போட்டி நிகழ்வுகளில் அதிகமான பாடசாலை மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கமாகும். ஆனால், இம்முறை கொவிட்19 வைரஸ் தொற்று காரணமாக பாடசாலைகள் இயங்காது, மூடப்பட்டிருந்ததால் அதிகமான மாணவர்கள் போட்டி நிகழ்வுகளில் பங்குபற்றவில்லை. இந்நிலை எதிர்காலத்தில் தொடரக் கூடாது என்பதே எமது எண்ணமும், எதிர்பார்ப்புமாகும்” என்று மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.எம்.றின்ஸான் குறிப்பிட்டார்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட கலை, இலக்கிய மன்றங்களுக்கு கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நிதியுதவிக்கான காசோலைக் கொடுப்பனவு வழங்கப்பட்டது. உதவி தேவையாகவுள்ள கலைஞர்களுக்கு பணக் கொடுப்பனவு வேலைத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் மொத்தம் 13 தமிழ்மொழி பேசும் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள பதிவு செய்யப்பட்ட கலை, இலக்கிய மன்றங்களிடமிருந்து ஏற்கனவே கோரப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் இந்நிதியுதவிக் கொடுப்பனவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் கீழ் 31 கலை, இலக்கிய மன்றங்கள் நிதியுதவிக் கொடுப்பனவைப் பெற்றுக் கொண்டன. கலை, இலக்கிய மன்றங்களின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு ரூபா 10 ஆயிரம், ரூபா 06 ஆயிரம், ரூபா 04,500 என்ற அடிப்படையில் நிதியுதவி வழங்கப்பட்டது.

அத்துடன், அம்பாறை மாவட்டத்திலுள்ள கலை இலக்கிய மன்றங்களை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்து, ஒழுங்குபடுத்தும் நடைமுறை கடந்த வருடம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தின் கீழ், கலை இலக்கிய மன்றங்களின்; செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

கலாசார அலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் சுமார் 15க்கும் மேற்பட்ட அரச விழாக்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அரச தொலைக்காட்சி விருது விழா, அரச புகைப்பட விருது விழா, அரச சிறுவர் நாடக விழா, அரச சிறுவர் நாடக பிரதியாக்கப் போட்டி, அரச சிறுவர் ஓவிய விழா, அரச சிறுவர் ஓவிய மற்றும் சிற்ப விழா, தேசிய கையெழுத்துப் பிரதிப் போட்டி, ‘கலாபூஷண’ விருது விழா, பிரதேச மற்றும் மாவட்ட இலக்கியப் போட்டிகள் என போட்டிகளின் பட்டியலில் பல அம்சங்கள் உள்ளன. பகிரங்க விண்ணப்பங்கள் கோரப்பட்டு இப்போட்டிகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More