Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை இயந்திரத்திற்குள் இயைந்துபோகின்ற அருவிவெட்டு..!

இயந்திரத்திற்குள் இயைந்துபோகின்ற அருவிவெட்டு..!

2 minutes read

ஊர்கூடித் தேரிழுத்த காலம் காணாமற்போனது போல ஊர் கூடி அருவி வெட்டின காலமும் காணுவதற்கு அரிதாக உள்ளது. இயந்திர உலகில் எல்லாமும் மறைந்து மறந்து செல்லும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

அருவிவெட்டு தொடர்பில் கந்தசாமி அவரின் ஆரம்ப கால உணர்வுகளை பகிர்ந்து கொண்ட போது,..

‘என்ர அப்பப்பான்ர காலத்திலேயே நாங்கள் சின்னப் பெடியனா இருக்கேக்க இந்த வயல்ல இறங்கி வேலை செய்யத் தொடங்கினம். ஆரம்பத்தில மனிதக் கூலியக் கொண்டு திடலில் கதிரை அடிப்பம், அதுக்குப் பிறகு மாட்டைக் கொண்டு நெல்லைப் பிரிச்சம், பிறகு ட்ராக்டர் வந்தது, இப்ப இந்த அருவிவெட்டு மிஷின் வந்திட்டது.

நவரட்ணம் கூறுகையில்,….

வயலை உழுவது தொட்டு, நெல் விதைத்து, அதை எப்படிப் பராமரிப்பது என்ற விவசாயப் பாடத்தையே பத்து நிமிடங்களுக்குள் புகட்டி விட்டார் அவர். உண்மையில் இவர் ‘நெல்லு டொக்டரா’ என்று கூட எண்ணி என்னுள்ளேயே சிரித்துக் கொண்டேன். ஆனால், அவர் சொன்ன மறுபுறம் என்னை சிந்திக்கச் செய்தது

‘முந்திக் காலங்கள்ள எல்லாம் நிறையப் பேர் வயல்ல வேலை செய்வினம். அருவி வெட்டு எண்டாலே வேலை செய்யவும் அதப் பாக்கவும் திருவிழாக்குப் போற சனக் கூட்டம் மாதிரி ஆட்கள் வருவாங்கள். காலைல அருவி வெட்டத் தொடங்கினால் மாலையாகி விடும் வேலை முடிய. வேலைக் களைப்பைப் போக்க, ஊர்ப் புதினம் கதைச்சுக் கொண்டு, வரிகள் தெரியாத பாட்டை அவையள் தங்களுக்குத் தெரிஞ்ச வசனத்தைப் போட்டு நிரப்பிப் பாட்டுப்பாடி வேலையைச் செய்வினம். இப்ப பாருங்கோ இதில மொத்தமே ஐந்துபேர் தான் நிக்கிறம்.’ அவரின் அந்த ஆத்மார்த்த வார்த்தைகள், தொலைந்த சந்தோஷங்களின் வலிகளாகவே எனக்குத் தெரிந்தது.

அறுவடையின் பின்னர் வைக்கோலினை விலைக்கு வாங்கவென்றே பலர் வருவார்களாம், ஆனால் இப்போது இயந்திரத்தினுள் சிக்குண்டு வைக்கோல்கள் தூளாகிப் போவதனால் பின் அவற்றை எரித்து விடுகிறார்களாம். ஆக, வைக்கோலும் போயிற்று. இப்போதெல்லாம் அருவி வெட்டுவதற்கு ஆட்கள் தேவையின்மையால் இதனை நம்பியிருந்து வயல் வேலை செய்யும் பலரிற்கும் அருவிவெட்டு இயந்திரம் வேலை இல்லாமற்செய்து அவர்களை ஓரங்கட்டி விட்டது என்பதுதான் நிதர்சனம்.

மாற்றம் அவசியந்தானே என எண்ணும் எனக்குள்ளும் கூட, இதில் மாற்றம் தேவையா என்ற எண்ண ஓட்டம் இப்போது.

எங்கள் தாத்தாவும் பாட்டியும் உழைத்த எமது வயல் நிலங்களை மறந்து விட்டு நாகரிகம் என்னும் போக்கில் மிதந்து கொண்டிருப்பது எமை எங்கு போய்ச் சேர்க்கும் என்று, வயலிற்கு வெளியே கழட்டி விட்டிருந்த பாதணிகளை அணிந்து கொண்டு வயலையே பார்த்தபடி வீடு நோக்கி நகர்ந்தேன் நினைவுச் சுழல்களுடன்…

மு.சுதர்சனி
நான்காம் வருடம்
ஊடகக் கற்கைகள் துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
நன்றி -தினகரன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More