பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்த வார இறுதியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தனது பப்புவா நியூ கினியா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில், நாளை வெள்ளிக்கிழமை (28) இரவு முதல் சனிக்கிழமை (29) காலை வரை இலங்கையில் தங்கியிருப்பார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது பார்க்கப்படுகின்றது.
ஜூன் மாதம் பாரிஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டின் அரச தலைவர் அமர்வின் போது ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதிஇம்மானுவேல் மக்ரோன் சில மணித்தியாலங்கள் கொழும்பில் தங்கியிருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பார் என அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் இதன்போது பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் கடனை மறுசீரமைப்பதை ஒருங்கிணைக்க இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பொதுவான தளத்தை அறிவித்த நாடுகளின் குழுவில் பிரான்சும் அங்கம் வகிக்கிறமை குறிப்பிடத்தக்கது.