வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று (05) முதல் வருகிற 8ஆம் திகதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்டத்தின் பிரதான தொழிலான மீன்பிடி தொழில் கடந்த சில தினங்களாக முடங்கியுள்ளது.
ஒரு சில மீன் ரகங்களுக்கு போதிய விலையை ஏற்றுமதி நிறுவனங்கள் வழங்காததை கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மீன்பிடி தொழில் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசுவதால் மீனவர்கள் இரண்டாம் நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை.
இது தொடர்பான எச்சரிக்கையையும் மீன்வளத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
மேலும், மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதற்கான அனுமதி சீட்டும் வழங்கப்படவில்லை.
இதனால், ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தொண்டி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8,800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் மற்றும் அதன் சார்பு தொழிலாளர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர்.
மீன்பிடி தொழில் முடங்கியதால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.10 முதல் ரூ.11 கோடி அளவிலான வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.