அதிகாரத்தின் உச்சமாகவும் அரச நெறிமுறைக்கான எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து மறைந்தவர் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்.
உலக வரலாற்றில், இரண்டாவது அதிக நாள்கள் ஆட்சி புரிந்தவர் என்ற பெருமையை பெற்ற மகாராணி எலிசபெத், கடந்த ஆண்டு செப்டெம்பர் எட்டாம் திகதி காலமானார்.
அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம், வெள்ளிக்கிழமை (08) அனுசரிக்கப்பட்டது.
அதனை சிறப்பானதாக்கும் வகையில், கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனம் நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுமார் 300 ஆண்டுகள் இந்தியாவில் கோலோச்சிய கிழக்கிந்திய கம்பெனி, 1874ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட நிலையில், அதன் பெயருக்கான உரிமையை இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சஞ்சீவ் மேத்தா வாங்கி உள்ளார்.
அந்தப் பெயரில் சஞ்சீவ் மேத்தா விலையுயர்ந்த கலைப்பொருட்களை உருவாக்கி வருகிறார்.
அவர் இரண்டாம் எலிசபெத் மாகாராணியின் நினைவாக ‘தி கிரவுன்’ என்றழைக்கப்படும் நாணயத்தை அறிமுகம் செய்துள்ளார்.
சுமார் நான்கு கிலோ கிராம் தங்கத்தையும் 6,426 வைரங்களையும் கொண்ட இந்த நாணயம், 24.5 சென்ரிமீட்டர் விட்டம் கொண்டது.
நாணயம் முழுவதும், 2 ஆம் எலிசபெத்தின் உருவங்கள், அவரின் வார்த்தைகள், அவர் பயன்படுத்திய மகுடங்கள் ஆகியவை மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.