பாக்கிஸ்தான் தேசிய அவையில் உள்ள 272 ஆசனங்களில் இதுவரை 219 ஆசனங்களின் பெறுபேறுகளே உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் தெரிக் இ இன்சாப் கட்சி 119 ஆசனங்களை பெற்று முன்னணியில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட சுயேச்சை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் இம்ரான் கானினால் ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் என பாக்கிஸ்தானிய அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சமயம் சார்ந்த கட்சிகளின் ஒத்துழைப்பை பெறுவதை விட சுயேச்சை உறுப்பினர்களுடன் இணைந்து அரசை அமைப்பது இம்ரான் கானிற்கு சிறப்பாக அமையும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கானிற்கு பெரும் போட்டியாக இருந்தவரும் தற்போது ஊழல் நடவடிக்கைகளுக்காக சிறையடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீபின் கட்சி 62 ஆசனங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பெனாசீர் பூட்டோவின் புதல்வரின் கட்சி 43 ஆசனங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
அதேவேளை, தேர்தல் வாக்குப் பதிவுகள் மோசடியான முறையில் இடம்பெற்றுள்ளதாக பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தேர்தல் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு காலதாமதம் ஆவது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேர்தல்களை கண்காணிக்கும் தரப்பினருக்கு கூட இறுதி வாக்கு எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் வழங்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறையடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீபின் சகோதரரும், பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக்கின் தலைவருமான ஷாபஸ் பாரிய அளவில் வாக்கு பதிவு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
வாக்கு பதிவு குறித்து சர்வதேச தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புக்களின் அவதானங்கள் வெளிப்படும் பட்சத்தில் பதட்ட நிலை உருவாகலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.