தென்கொரியாவின் சியோல் நகர மேயர் மாயமான நிலையில், அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
ஆளும் மத்திய இடது ஜனநாயகக் கட்சியை சேர்ந்த பார்க் ஒன் சூன் கடந்த 10 ஆண்டுகளில் 3 முறை சியோல் மேயராகப் பணியாற்றி வந்தார். அந்நாட்டின் அதிபர் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் சூன் கருதப்பட்டவர்.
இந்நிலையில், தனது தந்தையை காணவில்லை எனவும், அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் பார்க்கின் மகள் பொலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து 600க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாய்களுடன் தேடி வந்தனர்.
செல்போன் சிக்னல்கள், கண்காணிப்பு கேமராக் காட்சிகள் ஆகியவற்றின் உதவியுடன் பார்க் ஒன் சூனை தேடும் பணியில் சியோல் போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில், 7 மணி நேரத் தேடலுக்குப் பின் அவரது உடல், சியோலின் வடக்கு பகுதியில் உள்ள மவுண்ட் புகாக் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்த பார்க் ஒன் சூன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.