தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் கோகோடா பிராந்தியத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியது.
ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவான இந்த நில நடுக்கம் பூமிக்கு அடியில் 85 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
கோகோடா பிராந்தியத்தில் உள்ள பல நகரங்களில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சில வினாடிகளுக்கு மேல் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் கடும் பீதியடைந்தனர். எனவே அவர்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. மேலும் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.