ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 14 ஆவது போட்டி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மற்றும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.
இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
அவுஸ்திரேலிய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், அடுத்த ஆட்டத்தில் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத்தீவுகளையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது.
அத்துடன் அவுஸ்திரேலிய அணி தனது கடைசி 10 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் கம்பீரமாக வெற்றி நடை போட்டு வருகிறது.
விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 122 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
பந்து வீச்சில் சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் நன்றாக செயல்பட்டனர்.
எவ்வாறெனினும் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பெறும் நோக்குடன் இந்தியாவும் இந்தியாவை வீழ்த்தி வெற்றிப் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்தும் செல்லும் நோக்கில் அவுஸ்திரேலியாவும் களமிறங்கவுள்ளன.
இவ்விரு அணிகளும் இதுவரை உலகக் கிண்ண போட்டிகளில் இதுவரை 11 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் அவுஸ்திரேலிய அணி 8 போட்டிகளிலும், இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி -icc