மலேசியாவின் பஹாங் மாநிலத்தில் உள்ள ஒரு தீம் பார்க்கில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் சட்டவிரோதமாக பணியாற்றி வந்ததாக 54 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 18 பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாள் மற்றும் பிலிப்பைன்சை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்ட 54 பேரில் 13 பேர் பெண்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, சட்டவிரோதமாக மலேசியாவில் பணியாற்றும் வெளிநாட்டினரை வெளியேற அறிவுறுத்தும் ‘Back for good’ என்ற திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டு டிசம்பர் 31 வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த மன்னிப்புத் திட்டத்தின் கீழ், சொந்த நாட்டிற்கு திரும்ப 195,471 வெளிநாட்டினர் பதிவு செய்திருந்த நிலையில் 165,040 சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
மீதமுள்ள 30,431 பேர் நாடு திரும்ப காத்திருப்பதாக தெரிவித்தது மலேசிய குடியேற்றத்துறை. சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டினர் மலேசியாவிலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், தேடுதல் நடவடிக்கைகளை மலேசிய குடியேற்றத்துறை நாடெங்கும் மேற்கொண்டு வருகிறது.