பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதவி, அதிகாரம் கிடைத்தும் ஜாதியால் ஒடுக்கப்படுவது வேதனையளிக்கிறது என நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பட்டியலினத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் அவமானப்படுத்தப்படுவதும், தீண்டாமை வன்கொடுமைகளுக்கு ஆளாவதும் தொடர்கதையாகி வருகிறது.
இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பிரதிநிதிகள். இவர்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்கும், துன்புறுத்துவதற்குமான தைரியம் எங்கிருந்து வருகிறது?
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாநில அளவிலான உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு தலைவராக இருப்பவர் தமிழக முதல்வர். இந்த குழு ஆண்டுக்கு இரு முறை கூட வேண்டும் என்பது விதி. ஆனால் ஏழாண்டுகளாக இந்த குழு கூட்டம் நடக்கவே இல்லை.
தமிழகத்தில் ஜாதியின் பெயரால் நிகழும் வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மக்களின் உரிமையை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. ஜனநாயகத்தில் மக்கள் அனைவரும் சமம் எனும் சமத்துவக் கனவு நிறைவேற மக்களின் உரிமைகளை மையமாகக் கொண்ட அரசு அமைய வேண்டும். அதை மக்கள் நீதி மய்யம் செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.