தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பிரசாரம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் மாவட்டத்தில், தன் சொந்த தொகுதியான இடைப்பாடியில், தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தார்.
இதன்போது பொங்கல் பண்டிகைக்கு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என அறிவித்தார்.
முதல்வரின் அறிவிப்பை வரவேற்று ஏராளமானோர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரம் குறித்து தி.மு.க. மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை 10:00 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தை, தி.மு.க.விற்கு ஆலோசனை வழங்கும் ‘ஐ – பேக்’ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
கூட்டம் முடிந்ததும் ஸ்டாலின் சுற்றுப்பயண விபரத்தை, கட்சியின் முதன்மை செயலர் நேரு ஊடகங்களிடம் அறிவிக்கவுள்ளார்.
இந்த நிலையில், முதல்வர் அறிவிப்பை மிஞ்சும் வகையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.