எதிர்வரும் ஐ.சி.சி. ஆண்கள் டி – 20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதற்கான உத்தரவாதத்தை சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் எழுத்துபூர்வமாக கோரியுள்ளது.
ஐ.சி.சி ஆண்கள் டி 20 உலகக் கிண்ணம் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ளது.
இந் நிலையிலேயே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணிக்கு விசாக்கள் வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்குமாறு ஐ.சி.சி இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ளதாக இந்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா வழங்கப்படாவிட்டால் போட்டியின் எதிர்காலம் சீர்குலைந்துவிடும் என்றும் ஐ.சி.சி. கூறியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் கூட்டத்தின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய பின்னர் இந்த விடயம் ஐ.சி.சி.யின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் அதிகரித்துவரும் இராஜதந்திர பதற்றங்களுக்குப் மத்தியில் இந்த நடவடிக்கை வந்துள்ளது.
அதேநேரத்தில் இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரை இந்தியா இணைக்க முயற்சித்ததைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான நல்லிணக்கத்திற்கான எந்தவொரு வாய்ப்பும் வெகு தொலைவில் உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் பதற்றங்களும் அவர்களின் இருதரப்பு தொடரும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.