புதுடெல்லி:புதிய நாடாளுமன்ற கட்டிடம் உட்பட சுமார் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் சென்ட்ரல் விஸ்தா என்ற பெயரில் மறுசீரமைக்கும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா நோய் தொற்று பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த திட்டத்திற்கான கட்டுமானப் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம், ‘இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என்பதால், கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க முடியாது,’ என 2 நாட்களுக்கு முன் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரதீப் குமார் யாதவ் நேற்று மேல்முறையீடு செய்துள்ளார்.
அவர் மனுவில், ‘கட்டுமானப் பணிக்காக வரும் வேலையாட்கள் ஒரே இடத்திலேயேதான் தங்கி இருக்கிறார்கள். அதனால், நோய் தொற்று ஏற்படாது என டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. அது தவறானதாகும். இந்த விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, சென்ட்ரல் விஸ்தா கட்டுபானப் பணிக்கு தடை விதிக்க வேண்டும்,’ என கூறியுள்ளார்.