புதுடெல்லி: ‘கொரோனா 2வது அலையை காரணம் காட்டி, வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கு வாடிக்கையாளர்களுக்கு புதிய கால அவகாச சலுகையை வழங்க முடியாது,’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, மக்கள் வாங்கிய வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கு 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.
இதேபோல், தற்போதும் கொரோனா 2வது அலையால் நாடு முழுவதும் அதிக பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஷால் திவாரி என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்த மனுவில், ‘கொரோனா 2வது அலை பாதிப்பால் இந்தியாவில் ஒரு கோடி பேர் வேலை இழந்துள்ளனர்.
பண புழக்கமும் இல்லை. எனவே, வங்கி கடன் தவணைகளை செலுத்துவதற்கு புதிய கால அவகாசத்தை மக்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும்,’என கோரினார். நீதிபதிகள் அசோக் பூஷன், எம்.ஆர்.ஷா அமர்வில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘கொரோனா 2வது அலையை காரணம் காட்டி. வங்கி கடன் தவணையை செலுத்துவதற்கு புதிய கால அவகாசம் வழங்க உத்தரவிட முடியாது. மேலும், இந்த விவகாரத்தில் நாங்கள் எந்த உத்தரவு பிறப்பிக்கவும் விரும்பவில்லை. இதில் தலையிட நாங்கள் பொருளாதார நிபுணர்களும் கிடையாது. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என தெரிவித்தனர்.