Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 10, 11ம் வகுப்பு தேர்வு முடிவு மற்றும் செய்முறை தேர்வு அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு!

10, 11ம் வகுப்பு தேர்வு முடிவு மற்றும் செய்முறை தேர்வு அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு!

3 minutes read

சென்னை: கொரோனா தொற்று காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்ட 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக 2020-2021ம் கல்வி ஆண்டில் நடக்க இருந்த பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனால், பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி வழங்குவது என்பதை முடிவு செய்வதற்காக பள்ளி கல்வித்துறை, உயர்கல்வி துறை ஆகியவற்றின் செயலாளர்களும், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி கல்வித்துறை ஆணையர், ஒருங்கிணைந்த மாநில திட்ட இயக்குநர், அரசு தேர்வு துறை, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு பல்வேறு கட்டமாக ஆய்வுகள் செய்து 10 மற்றும் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கிய முறை என மொத்தம் 5 வழிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கலாம் என குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். இதையடுத்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் தொடர்பான விவரங்களை 30ம் தேதிக்குள் தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட குழுவினர் எடுத்துள்ள நடவடிக்கை மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வி துறையின் செயலாளர்கள், கல்வி துறை அதிகாரிகள் ஆகியோர் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து நேற்றும் குழுவினர் அமைச்சருடன் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021ம் கல்வியாண்டில் நடக்கவிருந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காக பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் தலைமையில் உயர் கல்வி துறை முதன்மை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு தனது அறிக்கையை அளித்துள்ளது. 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 12ம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களை கீழ்க்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

அதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு (உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி) – 50%
11ம் வகுப்பு பொதுத்தேர்வு (ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண் மட்டும்) – 20%
12ம் வகுப்பு செய்முறை தேர்வு / அக மதிப்பீடு – 30%

  • 12ம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறை தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30-க்கு பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
  • செய்முறை தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
  • கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 11ம் வகுப்பு செய்முறை தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
  • 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு எழுத்து தேர்வுகளின் அடிப்படையில் 12ம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.
  • கடந்த ஆண்டு 11ம் வகுப்பு எழுத்து தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை இருந்திருந்தாலோ, அந்த மாணவர்களுக்கு தற்போது அந்த தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையை கருத்தில்கொண்டு, 35 சதவீத மதிப்பெண் வழங்கப்படும்.
  • 11ம் வகுப்பு எழுத்து தேர்வு, அக மதிப்பீடு, செய்முறை தேர்வு மற்றும் 12ம் வகுப்பு அக மதிப்பீடு, செய்முறை தேர்வு ஆகிய தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.
  • ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்ணும் மேற்கூறிய முறைகளில் கணக்கிடப்பட்டு, உச்சநீதிமன்ற ஆணைப்படி ஜூலை 31ம் தேதிக்குள் அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்.
  • இந்த மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் தமக்கு குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பினால் 12ம் வகுப்பு எழுத்து தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும்.
  • தனித்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்று பரவல் சீரடைந்தவுடன், மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்விற்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.
    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மதிப்பெண் வழங்கும் முறை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: உயர் மதிப்பெண் பெற்ற 3 பாடங்களுடைய சராசரி 50 சதவீதம்
11ம் வகுப்பு பொதுத்தேர்வு: ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்துமுறை மதிப்பெண் மட்டும் 20 சதவீதம்
12ம் வகுப்பு செய்முறை தேர்வு: அக மதிப்பீடு 30 சதவீதம் என்கிற விகிதாசார அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடப்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More