சென்னை: தமிழ்நாட்டில் நவ 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக சென்னையில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ராட்சத மோட்டர்கள் கொண்டு தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டது.
இதேபோல் டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை தெரிவித்தனர். இதை அடுத்து பயிர்சேதங்களை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கினார். இதனையடுத்து கடந்த இரண்டு நாள்களாக தமிழ்நாட்டில் மழை சற்று ஓய்ந்திருந்தது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் அடுத்த மழை குறித்து கூறுகையில், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நவம்பர் 24, 25 ஆம் தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.