செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்து அவரால் விடுக்கப்படுகின்ற மின்னஞ்சல் ஒன்றில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
வடமாகாண அமைச்சரவை சபைத் தொடர்பில் நிலவுகின்ற பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியபொறுப்பு ஆளுநரிடமே இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் யாப்பின் உறுப்புரைக்கு அமைய ‘மாகாணமொன்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அம் மாகாண சபையின் உறுப்பினர்களின் மத்தியில் இருந்து மற்றைய அமைச்சர்களை ஆளுநர் அவர்கள் முதலமைச்சரின் அறிவுரைக்கு அமைய நியமிக்க வேண்டும் இந்த உறுப்புரையில் பதவி நீக்கம் பற்றிக் குறிப்பிடப்படவில்லை.
தற்போதைய அமைச்சர்களான கலாநிதி சர்வேஸ்வரன், அனந்தி சசிதரன், வைத்திய கலாநிதி குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோர் தமது பரிந்துரையின் பேரில் ஆளுநரால் நியமிக்கப்பட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.
தற்போது டெனீஸ்வரனும் ஒரு அமைச்சரே என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. அமைச்சர் ஒருவரை பதவி விலக்கக்கூடியவர் ஆளுநரே என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ள போதும், அதன் தீர்ப்பின் பிரகாரம் தற்போதுள்ள அமைச்சர் யாரையும் நீக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை.
ஆகவே இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டியவர் ஆளுநரே அன்றி முதலமைச்சர் அல்ல என்று சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நடந்தவற்றுக்குப் பொறுப்புக் கூற வேண்டியவர் ஆளுநர். நடந்த சிக்கலை மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி சரிசெய்ய வல்லவர் ஆளுநர் ஒருவரே.
இதுதொடர்பில், ஆளுநருடனும் தம்முடனும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கலந்துரையாடல் நடத்தி இருப்பதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதிருக்கும் ஆறு அமைச்சர்களையும் தத்தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்த பின் ஐந்து அமைச்சர்களை மட்டும் நியமிக்குமாறு ஆளுநரிடம் கோரலாம் என்று அவரால் தமக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
ஆனால் அவ்வாறு செய்யும் போது, டெனீஸ்வரன் கடந்த 11 மாதங்களாக அமைச்சராக செயற்பட்டார் என்று ஆவதுடன், அவருக்கான அமைச்சருக்குரிய வேதனத்தையும் வழங்க நேரும் என்று விக்னேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.
அத்துடன் கடந்த 11 மாதங்களில் டெனீஸ்வரன் பங்குபற்றாத அமைச்சர்கள் சபையின் தீர்மானங்களது சட்டரீதியான தகமை கேள்விக்குறியாகிவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.