இன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் எவ்வித தடங்கலும் இன்றி முடிவடைந்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் மூலமாகவே சுதந்திரமானதும் அமைதியானதுமான ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடிந்திருக்கிறது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் ஊடாக நல்லாட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவை எவ்வித தலையீடுகளுமின்றி சுதந்திரமாக செயற்பட்டன.
அதன் ஓரங்கமாகவே இம்முறை ஜனாதிபதி தேர்தல் எவ்வித தலையீடுகளுமின்றி சுதந்திரமானதாகவும் நியாயமான முறையிலும் அமைதியாக நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது.
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவின் வெற்றியின் பின்னர், நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்று நம்புகின்றேன்” என மேலும் தெரிவித்தார்.