அமெரிக்காவைச் சேர்ந்த எடிஹ என்ற பெண்மணி தலை மன்னார் முதல் தமிழகத்திலுள்ள தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை 10.15 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
பாக் ஜலசந்தி கடற்பகுதி தமிழகத்தையும், இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும்.
ராமேஸ்வரம் தீவும், அதனை தொடர்ந்துள்ள மணல் தீட்டுக்களான ஆதாம் பாலமும் பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கின்றது.
இந்தியாவிலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும், ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதியும் கொண்ட கடற்பகுதியாகும்.
சர்வதேச அளவில் பல்வேறு நீச்சல் போட்டியில் சாதனை படைத்த அமெரிக்காவைச் சேர்ந்த எடிஹ எனும் 45 வயதுடைய பெண்ணே இவ்வாறு சாதனைப்படைத்துள்ளார்.
தலை மன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கிலோ மீற்றர் தொலைவுள்ள பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடப்பதற்காக கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுதுறை, பாதுகாப்புதுறை அமைச்சு மற்றும் இலங்கை தூதரகத்திற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தது.
இந்தியா-இலங்கை ஆகிய இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில், தலை மன்னாரிலிருந்து நேற்று காலை 05 மணிக்கு இங்கிலாந்தை சார்ந்த ஆடம் மோஸ் என்பவருடன் சேர்ந்து எடிஹ நீந்த ஆரம்பித்துள்ளார்.
இலங்கை-இந்திய சர்வதேச எல்லைக்கு 12.05 மணியளவில் வந்தடைந்த இவர்கள் பிற்பகல் 03.15 மணியளவில் தனுஸ்கோடி அரிச்சல் முனை அருகே உள்ள முதலாம் தீடை அருகே சென்றடைந்துள்ளனர்.
இவர்களுக்கு உதவியாக இலங்கை கடற்படையின் ரோந்து படகு சர்வதேச எல்லைவரையிலும், இந்திய கடற்பகுதியில் கடலோர காவல் படையின் ஹொவர் கிராஃட் கப்பலும் பாதுகாப்பினை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.