இலங்கையில் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு சற்று முன்னர் நாடு பூராகவும் ஆரம்பமாகி உள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து 3 ஆயிரத்து 652 பேரும், சுயேட்சைக்குழுக்களில் இருந்து 3 ஆயிரத்து 800 பேருமாக மொத்தம் 7 ஆயிரத்து 452 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
160 தேர்தல் தொகுதிகளில் இருந்து இவர்களில் 196 பேர் வாக்களிப்பு மூலமும், 29 பேர் தேசியப்பட்டியல் ஊடாகவும் தெரிவு செய்யப்படுவார்கள். 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்களும் 2 ஆயிரத்து 773 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்பு கடமையில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார அதிகாரிகளும் இம்முறை தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மாலை 5 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்ததும் ‘சீல்’ வைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். மறுநாள் காலை அதாவது 6 ஆம் திகதி காலை 8 மணி முதல் வாக்கெண்ணும் பணி ஆரம்பமாகும்.