Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தடைப்பட்டிருந்த அபிவிருத்தி வேலைகள் மீள் ஆரம்பம்

தடைப்பட்டிருந்த அபிவிருத்தி வேலைகள் மீள் ஆரம்பம்

4 minutes read

‘கொரோனாவினால் தடைப்பட்டிருந்த அபிவிருத்தி வேலைகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்

தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

யாழ் மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களில் 2 பிரதான திட்டங்கள் அரசினாலும் மேலும் ஒரு திட்டம் உலக வங்கியின் நிதியீட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இதனைவிட பல திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன

இதில் “சப்ரிகம” செயற்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள 435 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் சுமார் 690 மக்களால் இனங்காணப்பட்ட திட்டங்கள் ஏற்கனவே கடந்த பாராளுமன்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டு இவ் வருடம் 2020ல் நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

அந்த 690 திட்டங்களுக்குமான மொத்த மதிப்பீடு 870 மில்லியன் ரூபா. இந்த திட்டத்தினை கொரோனா காலப்பகுதிக்கு முன்னர் தொடங்கியிருந்தாலும் அதன் பிற்பாடு அந்த வேலைகள் முற்றாக முடிவுறுத்தப்படவில்லை.

எனினும் 573 வேலைகள் முடிவுற்றுள்ளன. இதற்கென 245 மில்லியன் ரூபா தற்போது வரை செலவிடப்பட்டுள்ளது.

மிகுதி வேலைகள் இந்த வருட இறுதிக்குள் பூர்த்தி செய்யக்கூடியவாறான பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதேபோல” கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின்” கீழ் 57 திட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளன.

அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு 21.2 மில்லியன் ரூபா. இந்த 57 திட்டங்களில் தற்போது 46 திட்டங்கள் பூரணப் படுத்தப்பட்டுள்ளன.

இதற்கென 16 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இத் திட்டம் பெரும்பாலும் இவ் வருட இறுதிக்குள் பூரணப்படுத்தப்படும்.

மேலும் கொரோணா தொற்று மற்றும் நிலைமாறுகால பகுதியில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படாமை போன்ற காரணத்தால் திட்டங்களை சீராக நடாத்துவதில் சிறு தடங்கல் ஏற்பட்டிருந்தது.

இருந்த போதிலும் மிகுதி நான்குமாத காலப்பகுதிக்குள் இந்த திட்டத்தினை முடிவுறுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகிறது.

இதனைவிட “தந்திரோபாய நகர அபிவிருத்தி திட்டம் ” இது உலக வங்கியின் நிதியீட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்றது இத்திட்டத்தில் யாழ் நகரப்பகுதி உள்வாங்கப்பட்டு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

திட்ட மொத்த மதிப்பீட்டுத் தொகை 7013 மில்லியன் ரூபா. நான்கு பிரதான வகையாக இத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது

  1. வீதி போக்குவரத்து முகாமைத்துவமும் பொது போக்குவரத்து கட்டமைப்பு வசதியினை மேம்படுத்தல்
  2. வடிகாலமைப்பு தொகுதிகளை மேம்படுத்தல்,

3.நகரதரமுயர்த்தல் அதேபோன்று கலாச்சார பாரம்பரியம் மிக்க இடங்களை பேணிபாதுகாத்தல்

4.யாழ்ப்பாண மாநகர சபையினை வலுப்படுத்தல்

இந்த நான்கு கட்டங்களாக இந்த தந்திரோபாய நகர திட்டமானது யாழ் நகரத்தில் அமுல்படுத்தப்படுகின்றது.

வீதி போக்குவரத்து முகாமைத்துவம் என்ற வகையிலே தற்பொழுது யாழ்ப்பாண நகரத்தை இணைக்கின்ற வகையிலே கச்சாய்- கொடிகாமம்- புலோலி வீதி தற்பொழுது அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

அதேபோல யாழ்ப்பாணம்- பொன்னாலை வீதி புனரமைப்பு செய்யப்படுகின்றது.

இதனைவிட பொது போக்குவரத்து மற்றும் போக்குவரத்து முகாமைத்துவம் தொடர்பான ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவுகள் யாழ் மாநகரசபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு யாழ்ப்பாண நகரத்தில் வீதிப் போக்குவரத்து மற்றும் ஏனைய திட்டங்கள் தொடர்பில் ஆராயப்படும்.

இதனைவிட நகர மையத்தில் கலாசார பாரம்பரியம் மிக்க இடங்களை பேணிப் பாதுகாத்தல் என்ற திட்டத்தின் கீழ் பழைய கச்சேரி மற்றும் பழைய பூங்கா என்பன புனரமைப்பு செய்யப்படவுள்ளன.

அதனை அபிவிருத்தி செய்து அதனை நவீன மயப்படுத்தி பேணுவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

மேலும் நகர வீதிகளில் நடைபாதை ,சைக்கிள் பாதை போன்றவை உள்ளடக்கப்பட்டு நகர மக்கள் பயன்படுத்த கூடிய திட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதனைவிட 3 பிரதானமான பூங்காக்கள் நகரத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளன.

அதே போல் ஏனைய 6 சிறு பூங்காக்களும் இந்த நகரப்பகுதியில் அமைக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாண நகரினை பொறுத்தவரை பிரதானமாக தேவைப்படுவது வாகனத் தரிப்பிடம்.

நகரப் பகுதியில் வாகன தரிப்பிடம் மிகவும் கஸ்டமான ஒருவிடயமாக காணப்படுகின்றது.

அதனை பாதுகாப்பான இடமாக அமைப்பதற்குரிய முன்மொழிவு திட்டத்திலே உள்ளடக்கப்படவுள்ளது.

அதாவது பொது பயன்பாட்டு வாகன தரிப்பிடம் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது.

அதனைவிட பொது வசதிகள் ஏற்படுத்துவதற்கும் திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தந்திரோபாய நகர அபிவிருத்தி திட்டம் தற்பொழுது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மேலும் இந்த திட்டத்தை அடுத்த வருட இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்திருந்தோம்.

எனினும் திட்டமிட்ட காலத்திற்குள் இந்த கொரோனா தொற்று காரணமாக அதனை செயற்படுத்த முடியாது போய்விட்டது.

எனினும் மிகத் துரிதமாக அமுல்படுத்தி மிகுதி வேலைகளை குறித்த காலப்பகுதிக்குள் நிறைவு செய்வதற்குரியவாறு மீளாய்வுக் கூட்டங்களை நடாத்தி அதனை இயலுமானவரை நிறைவு செய்வதற்குரிய பணிகளை முன்னெடுத்துள்ளோம் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More