தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுக்காலத்தின் பின்னர் கூடவிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேதியக்கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மற்றுமம் கொறடா தொடர்பான நிலைப்பாடுகள் பாராளுமன்ற குழு கூட்டத்தில் முடிவெடுத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இவ்விடயம் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கூட்டமைப்பின் பேச்சாளராக என்னை நியமிப்பதாக பங்காளிகட்சித் தலைமைகளின் கூட்டத்தின் போதே முடிவு எடுக்கப்பட்டது. எனினும் பாராளுமன்றக்குழு கூட்டத்தின் போதே அது உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட வேண்டும்.
அது இன்னும் கூடவில்லை. அதன்போதே தெரிவுகளை மேற்கொள்ள முடியும்.
எனவே உத்தியோகபூர்வமான பேச்சாளர் என்று நான் இப்போது கூறமுடியாது.
இந்தவாரம் பாராளுமன்றக் குழுக்கூட்டம் கூடுவதாக இருந்தது. எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளமையால் அது தாமதமாகியுள்ளது.
எனவே கூட்டம் இடம்பெறும் போது அந்த தெரிவுகள் இடம்பெறும். அதில் எந்த பிரச்சனையும் இருக்கப்போவதில்லை என தெரிவித்தார்.