ஈஸ்டர் தாக்குதலை இந்த அரசாங்கம், தனது அரசியல் சுயலாபத்திற்காகவே கடந்த காலங்களில் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நாடகத்திற்கு மக்கள் ஏமாற்றமடையக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தற்போதைய அரசாங்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “பொதுத் தேர்தல் காலத்தின்போது, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அதிகளவாக பேசப்பட்டது. இதுதொடர்பாக பல்வேறு நாடகங்களும் அன்று அரங்கேற்றப்பட்டன.
ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாக செயற்பட்டவர்களுக்கு இந்த அரசாங்கம் வழங்கப்போகும் தண்டனை என்ன? எம்மைப் பொறுத்தவரை அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும்.
பொதுத் தேர்தல் காலத்தில், இந்த விவகாரத்தை அரசாங்கம் அரசியல் லாபத்திற்காகத் தான் பயன்படுத்தியது. நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரனை இந்த அரசாங்கம் கைது செய்தது.
ஆனால், இன்று அவருக்கு எதிராக எந்தவொரு சாட்சியும் இல்லாத காரணத்தினால் அவரை விடுதலை செய்தது. அப்படியானால், பொதுத்தேர்தல் காலத்தின்போது கூறிய கதைகளுக்கு என்ன ஆனது? இவை அனைத்தும் மக்களை முட்டாளாக்க அரசாங்கம் மேற்கொண்ட செயற்பாடாகவே நாம் கருதுகிறோம்.
இதிலிருந்தே அரசாசங்கம் அரசியல் லாபத்திற்காகத்தான் இந்த விடயத்தை பயன்படுத்தியது என்பது உறுதியாகியுள்ளது.
இன்று ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் குறித்து கவனம் செலுத்தாமல், ஜனநாயகத்தை அழிக்கும் 20 ஐ கொண்டுவரவே இந்த அரசாங்கம் முயற்சி எடுக்கிறது.
இது அரசியல் கண்ணாம்மூச்சி நாடகமாகும். இதற்கு மக்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏமாந்துவிடக்கூடாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.