Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மணி சார்பான 10 உறுப்பினர்களுக்கு இறுதி முடிவு கேட்டு முன்னணி கடிதம்

மணி சார்பான 10 உறுப்பினர்களுக்கு இறுதி முடிவு கேட்டு முன்னணி கடிதம்

2 minutes read

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் வி. மணிவண்ணன் சார்பில் செயற்படும் 10 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களிடம் அவர்களின் இறுதித் தெரிவைத் தெரிவிக்குமாறு கோரி முன்னணியின் பொதுச்செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

“தாங்கள் எமது அரசியல் இயக்கத்துடன் தொடர்ந்து பயணிப்பது அல்லது பயணிக்காது விலகுவது தொடர்பான தங்களின் இறுதித் தெரிவைத் தீர்மானிப்பதற்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்படுகின்றது.

இந்தக் கடிதம் கிடைக்கப் பெற்று 14 நாட்களுக்குள் தங்களின் இறுதித் தெரிவு தொடர்பாக எனக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், குறித்த உறுப்பினர்களுக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

கடந்த 10ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டுள்ள அந்தக் கடிதம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் சார்பு உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில்,

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கு தங்களது பெயர் எமது இயக்கத்தால் பரிந்துரைக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில் அந்தக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட சபைக்கு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள்.

எமது அமைப்பால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டவர்களுடன் தொடர்புபட்ட வகையில் எமது அரசியல் இயக்கத்துக்கும்,

அதன் தலைமைக்கும் எதிரான கருத்துக்களைப் பொது வெளிகளிலும் முகநூலினூடாகவும் தெரிவித்து வருகின்றீர்கள்.

எமது அரசியல் இயக்கத்துடன் தங்களை இணைத்துப் பயணிக்க நல்லிணக்கங்களைத் தாங்கள் தொடர்ச்சியாக மீறி வருகின்றீர்கள்.

எமது அரசியல் இயக்கத்தை மத்திய குழுவின் தீர்மானங்களே கட்டுப்படுத்துவதாகும். எமது அரசியல் இயக்கத்துடன் இணைந்து பயணிப்பதாயின் மத்திய குழுத் தீர்மானங்களை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது,

என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்” – என்றும் பொதுச் செயலாளர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கடிதம் யாழ்ப்பாணம் மாநகர சபையில் இரு பெண் உறுப்பினர்கள் உட்பட மூவருக்கும், வலிகாமம் தெற்கு மற்றும் சாவகச்சேரி பிரதேச சபைகளின் 7 உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More