கிளிநொச்சியில் தங்கியிருந்த 30 பேரினது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சரவணபவன் தெரித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக வருகை தந்திருந்த வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 30 பேருக்கு முதற்கட்டமாக இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மேலும் சில ஒப்பந்த நிறுவனங்களில் இவ்வாறு வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்துள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தொடர்பிலான தகவல்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளி மாவட்டங்களிலிருந்து கிளிநொச்சி மாவட்டத்தில் தங்கியுள்ள அனைவரும் தம்மைப் பற்றிய தகவல்களை சுகாதார சேவைகள் பணிமனைக்கு கிடைக்கக்கூடிய வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியில் குறித்த தொற்று மாவட்டத்தில் பரவாமலும், அதனைத் தடுக்கும் வகையிலும் பொறுப்புடன் மக்கள் செயற்பட வேண்டும் எனவும் அவ்ர கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளி இடங்களில் இருந்து ஏதோவொரு காரணங்களுக்காக வருகைதரும் மக்கள் மற்றும் தொழில் நிமித்தம் வெளி இடங்களிற்குச் சென்று சொந்த இடங்களுக்கு திரும்புவோர் இவ்விடயம் தொடர்பாக விழிப்புடன் செயற்பட வேண்டும்.
மேலும், இதுவரை தகவல்கள் வழங்காது இருப்போர் நேரடியாக சுகாதார சேவைகள் பணிமனையுடன் தொடர்புகொள்ள முடியும்.
பிரதேசத்திற்குப் பொறுப்பான சுகாதார பரிசோதகர், கிராம சேவையாளர் மற்றும் கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு தகவலை வழங்கி பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.