Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழருக்கான உரிமையை வழங்கினால் மாத்திரமே அரசால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் | கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழருக்கான உரிமையை வழங்கினால் மாத்திரமே அரசால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் | கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

2 minutes read

தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுத்தால் மாத்திரமே நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப  முடிவதுடன் அரசாங்கம்  எதிர்பார்க்கும் இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என தமிழ தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் உண்மைகளை மறைக்கும் வரை,அதிலிருந்து தப்பலாம் என்ற எண்ணத்துடன் செயற்படும்  வரை நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாது. நாடு முழுவதிலும் அனைவருக்கும் பாதுகாப்பு என்ற நிலை இல்லாவிட்டால் அரசாங்கம் எதிர்பார்க்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. மக்களைப் பிரித்து இனவாதம் மூலம் வாக்குகளுக்காக செயற்படும் நிலை மாற வேண்டும். அரசாங்கம் தெரிவிக்கும் பொய் தொடர்பில் தற்போது சிங்கள மக்கள் கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் அதிகாரப் பகிர்வு என்றால் என்ன எனத் தெரியாத ஒருவரே தற்போது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்றார். அமைச்சர் சரத் வீரசேகரவின் நடவடிக்கைகள் குறித்து வெட்கப்படுகின்றோம். அரசாங்கம் கடந்த எழுபத்தி நான்கு வருடங்கள் பயணித்த பாதையிலிருந்து மாற வேண்டும். அதே பாதையில் தொடர்ந்து பயணித்து பன்மை வாதத்தை உணராத வகையில் நாட்டை உருவாக்க முடியாது .

இனப்படுகொலை என்பது வெறுமனே மக்களை கொலை செய்வது மாத்திரமல்ல. 4 இலட்சம் மக்கள் நிர்க்கதியாகி இருந்த நிலையில், 70 ஆயிரம் பேருக்கே  உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்பினீர்கள். யுத்தம் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் 2009 மே 16ஆம் திகதி யுத்த நிறுத்தம் மேற்கொள்ள நானே அன்று மத்தியஸ்தராக இருந்து செயற்பட்டேன். யுத்தத்தை நிறுத்த பசில் ராஜபக்ஷ்விடன் நான் கதைத்தேன். ஆனால் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானிப்பதாக தெரிவித்தார். ஆனால் ஒன்றும் இடம்பெறவில்லை. விடுதலைப்புலிகள் யுத்த நிறுத்தத்தை அறிவித்து ஆயுதங்களை கீழே வைத்த பின்னரும் இராணுவத்தினர் தாக்குல் மேற்கொண்டனர்.

அத்துடன் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்த நிலையிலும் நாடு இன்னும் கட்டி எழுப்பப்படவில்லை. பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் உதவி கேட்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 12 வருடங்களில் அரசாங்கம் பெற்றுக் கொண்ட பயன் இதுதான். 

எனவே நாம் சர்வதேச விசாரணை பற்றி பேசினால் அரசாங்கம் ஏன் பயப்பட வேண்டும் என கேட்கின்றேன். தமிழ் மக்கள் எதிரிகள் அல்ல. அவர்களது உரிமைகளையே அவர்கள் கேட்கின்றனர். அவர்கள் அதற்கான அருகதை உடையவர்கள். அதை அரசாங்கம் புரிந்து செயல்படாவிட்டால் ஒருபோதும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More